ஷார்ஜாவில் வரவேற்பு

நன்றி : சின்னாமனி அசரப் அலி

துணிவு கொள் !

                    (பல்லவி)

வாளினைக் கையில் எடடா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ    (வாளினை)

                    (அநுபல்லவி)

நாளல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ   (வாளினை)

                    (சரணம்)

ஆள்வோரும் செல்வர்க்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலின் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே நீ   (வாளினை)

- கவி. கா.மு.ஷெரீப்

தமிழ் முழக்கம் பதிப்பகம்

1955 – ஆம் ஆண்டு “தமிழ் முழக்கம் பதிப்பகம்” பதிப்பித்த கவி.கா.மு.செரீப் அவர்களது நூல்கள்

தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?  
புது யுகம் – நாடக நூல்                                                                 
ஒளி – கவிதை                                                                                      
இன்றையச் சமுதாயம் – கவிதை                                         
காதல் வேண்டாம் – கதைகள்                                                  
காதலும் கடமையும் – கதைகள்                                                                    
தமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை                                   
இலக்கியத்திலும் பித்தலாட்டமா? – கட்டுரை                                       
முஸ்லீம் லீக் தேவைதானா? – கட்டுரை                                               
தி.மு.க. நாடாளுமா?  – கட்டுரை

தாய்நாடு

தாய்நாடு – 1947 டிசம்பரில் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இது ஏழாவது ஆண்டின் இறுதி இதழ். ஆசிரியர். க.நாராயணன். புதுக்கோட்டையிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. அட்டையிலுள்ளவர் விஜயலட்சுமி பண்டிட்.

தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை கா.மு.ஷெரீப் இந்த இதழில் எழுதியுள்ளார்.

பாட்டும் நானே பாவமும் நானே

இந்தப் பாடல் உண்மையிலேயே கவி கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியது. ஆனால் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும்

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே

(பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு

(பாட்டும்)

பத்த்திரிக்கையாளர் ஷெரீப்

சாட்டை – 1956 இல் ம.பொ.சி. பொன்விழா மலராக இதழ் வெளிவந்துள்ளது. சென்னையிலுள்ள கா.மு.ஷெரீப் அவர்களது தமிழ் முழக்கம் அச்சகத்தில் அச்சாகி வெளிவந்தது. ஆசிரியர் ஏ.பி.நாகராஜன். ம.பொ.சி. அவர்களது பன்முக ஆற்றலை பல்வேறு பார்வையாளர்களின் கருத்துகள் வழி சிறப்பாக வெளியிட்டிருக்கும் இதழ் இது. அரசியல்வாதி மட்டுமல்ல அச்சுக்கோர்க்கும் கலைஞன் எனப் அச்சுக்கோர்க்கும் ம.பொ.சி யின் படத்துடன் கட்டுரை எழுதியுள்ளது கருத்து விதைப்பிற்காக ம.பொ.சி அவர்கள் எத்துணை இடர்பாடுகளுள் மூழ்கியிருந்தார் என்பதை அறியமுடிகிறது. மறைந்த எல்லையை மீட்கப்போராடிய மாவீரர் என்பதை வினாயகம் அவர்களது கட்டுரையின்வழி அறிய முடிகிறது.

எம்.ஜி.ஆரின் பாடலாசிரியர்

மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்காக எத்தனையோ கவிஞர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் கா.மு.செரீப் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் அவர் வைத்திருந்தார். பல சமயங்களில் தன் நண்பர்களிடம் மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

மக்கள் திலகத்திற்கு பாடல்கள் எழுதிய இன்னபிற கவிஞர்கள் இவர்கள் :

தஞ்சை ராமையாதாஸ்
மாயவநாதன்
பாபநாசம் சிவன்
மு.கருணாநிதி
கு.சா.கிருஷ்ணமூர்த்தி
ஆத்மநாதன்
கே.டிசந்தானம் 
ராண்டர்கை
உடுமலை நாராயணகவி 
சுரதா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
லட்சுமணதாஸ்
கு.மா.பாலசுப்பரமணியன் 
அ.மருதகாசி
முத்துகூத்தன்
கண்ணதாசன்
வாலி
ஆலங்குடி சோமு
அவினாசிமணி 
புலமைபித்தன்
வித்தன் 
நா.காமராசன்
முத்துலிங்கம்
பஞ்சு அருணாசலம்

கதாசிரிய கலைஞரை அறிமுகம் செய்த கலைமாமணி கவிஞர்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “மந்திரிகுமாரி”, மெகா ஹிட் திரைப்படமாகும். இதில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி எழுதிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கருணாநிதி எப்படி பட உலகுக்கு வந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
 
திருவாரூரில் இருந்து 15 மைல் தூரத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜுன் 3_ந்தேதி பிறந்த கருணாநிதி, இளமையிலேயே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார். அவருடைய நாடகங்களில் ஒன்றைப் பார்த்த ஈ.வெ.ரா.பெரியார், அவரைப் பாராட்டியதோடு, ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.
 
1949_ம் ஆண்டு தி.மு.கழகத்தை பேறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதில் முக்கியப் பங்கெடுத்துக்கொண்ட கருணாநிதி, பின்னர் தி.மு.க. தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
 
இந்த சமயத்தில், கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
 
இந்தப்படத்தை டைரக்டர் செய்தவர் ஏ.எஸ்.ஏ.சாமி. அக்காலத்தில் இவர் புகழ் பெற்ற டைரக்டராகவும், வசன கர்த்தா வாகவும் விளங்கினார். ராஜகுமாரியின் வசனங்களின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான் என்றாலும் “வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி” என்றும், “உதவி மு.கருணாநிதி” என்றும் படத்தில் “டைட்டில்” கார்டு போட்டார்கள்.
 
கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. மனைவியுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். கருத்தாழம் மிக்க வசனங்கள் எழுதியும், படத்தில் வசன கர்த்தாவாக அவர் பெயர் இடம் பெறவில்லை.
 
இந்த சமயத்தில், கருணாநிதியின் எழுத்துத்திறமை பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் கவிஞர் கா.மு.ஷெரீப் கூறினார். அதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை_வசன இலாகாவில் சேர்ந்து பணிபுரியுமாறு கருணாநிதிக்கு தந்தி அடித்தார், டி.ஆர்.சுந்தரம். அந்த அழைப்பை ஏற்று, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கருணாநிதி சேர்ந்தார்.
 
அப்போது, மாடர்ன் தியேட்டர்சார் “சண்டமாருதம்” என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்கள். அதன் பொறுப்பாசிரியராக கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே கருணாநிதியின் எழுத்துத் திறமையை அறிந்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர கருணாநிதி வந்தபோது, அவரை கண்ணதாசன் அன்புடன் வரவேற்றார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
 
இந்த சமயத்தில், “பொன்முடி” படம் முடிவடையும் நிலையில் இருந்தது. அப்படத்தின் பின்பகுதிக்கான கதையை அமைத்துத் தருமாறு கருணாநிதியை சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதன்படி, பொன்முடி படத்தின் இறுதிப் பகுதியை (கபாலிகர் கூட்டம் வருவது) கருணாநிதி அமைத்துத் தந்தார்.
 
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.
 
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.
 
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
 
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
 
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது.  முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
 
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
 
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
 
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
 
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
 
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
 
ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.
 
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
 
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
 
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
 
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
 
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
 
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
 
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
 
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
 
“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
 
அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
 
_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.
 

எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)
 
“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

நன்றி : மாலை மலர்

நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் எழுதி நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

இறைவனுக்காக வாழ்வது எப்படி? – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
தஞ்சை இளவரசி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
நல்ல மனைவி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
வள்ளல் சீதக்காதி வரலாறு – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
விதியை வெல்வோம் – சீதக்காதி நூல் வெளியீட்டகம்

எம்.எஸ். ராஜேஸ்வரி


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது.

இதன் விளைவாக இன்று வரை ஆயிரக்கணக்கான நிலைக்களன்களில், ஏராளமான ராகங்களில் இசை அமைக்கப்பட, நூற்றுக்கணக்கான நடிகர்கள் அந்த இசைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் குழந்தைக் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

1955ல் வெளியான ‘டவுன் பஸ்’ திரைப்படத்தில் கவி கா.மு.ஷெரீப் எழுதிய ஒரு பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல் இதோ:-

சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல

பட்டு மெத்தை விரிச்சு வச்சேன்; சும்மா கெடக்குது
பசும் பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன்; ஆறிக் கிடக்குது

தலையை வாரி பூ முடிச்சேன்; வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வழியை வழியைப் பார்த்துப் பார்த்து
கண்ணும் நோகுது – அவர்
வந்தால் பேச நிறைய சேதி
நெஞ்சில் இருக்குது

படம் எடுத்தவர் எம்.ஏ.வேணு; இயக்கியவர் கே.சோமு; கதை வசனம் ஏ.பி.நாகராஜன்; கதாநாயகன் என்.என்.கண்ணப்பா; கதாநாயகி அஞ்சலி தேவி.

கதாநாயகி பாடுவது போலப் பாட்டு இருந்தாலும் சிறியவர் பெரியவர் அனைவரும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் வண்ணம் பாட்டின் இசை இருக்கவே, இது பெரும் ஹிட் ஆனது. இதே பாட்டு சோகமாக ஒரு முறை பாடப்படும். அதனால் இந்தப் பாடலின் வரிகளும் இசை அமைப்பும் தனிப் பொலிவைப் பெற்றன. இதற்கு முன்னர் பல படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தாலும் இதையே தனது முதல் படம் என்று கூறிப் பெருமைப்படுவார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. இன்று வரை அவரைப் போலக் குரல் வளம் உடைய இன்னொருவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.

‘களத்தூர் கண்ணம்மா’வில் கமலஹாஸனுக்காக “அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே” பாடலைப் பாடியவர் இவரே.

குட்டி பத்மினிக்காக ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில், ‘கோழி ஒரு கூட்டிலே” என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். ‘மகாதேவி’ படத்தில் சாவித்திரிக்காக “காக்கா காக்கா மை கொண்டா” மற்றும் “மண்ணுக்கு மரம் பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்)”, “மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே” போன்ற பாடல்கள் இவரது தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

பராசக்தி படத்தில், “ஓ, ரசிக்கும் சீமானே”, “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு விட்டுப் போனவரே” ஆகிய பாடல்கள் மூலம் ஜனரஞ்சகமான இதர பாடல்களையும் பாட வல்லவர் இவர் என்பது நிரூபணமானது.

படிக்காத மேதை படத்தில் சௌகார் ஜானகி பாடிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” பாடல் படத்திற்கு களை கூட்டியது.

ஏராளமான சிறப்பான பாடல்களை, குறிப்பாக குழந்தைக் குரலில் பாடிய சிட்டுக் குருவி குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு தமிழ் சினிமா இசை வரலாற்றில் நிச்சயம் தனி இடம் உண்டு!

நன்றி : ச.நாகராஜன்/ நிலாச்சாரல்

« Older entries

Follow

Get every new post delivered to your Inbox.