ஆண்:
வானத்து வில்லடியோ — கண்ணேயுன்
வளைந்த புருவம் ரெண்டும்
மானொக்கும் நின்விழிகள் – கண்ணே யென்
மதியை மருட்டுதடி!
பெண்:
தேனொக்கும் பேச்சழகா – உன் சொல்லால்
செவிகள் குளிர்ந்த தடா
பேணிடும் இவ்வழகு — போனாலென்
பின்னால் வருவா யோடா?
ஆண்:
வாசப் பொன் மேனியடி – உந்தனின்
வனப்புக் கிணை யேதடி ?
பூசப்படும் சுவரோ? — பின்னாலுன்
தேசு கெடு வதற்கே?
பெண்:
கொவ்வை இதழ் சூம்பும் – குமரியென்
குண்டு முகம் திரையும்
செவ்வரிக் கண் குழியும் — அப்போ தென்
செவ்வியை போற்று வாயோ?
ஆண்:
அல்வாவை யுண்ணும் போது — அதனின்
அடுத்த நிலை ஆய்தல்
நல்ல செயலோடி? — கண்ணே யென்
நல்லுரை கேட் பாயடி!
பெண் :
எண்ணத் துணி கருமம் – என்பதை
எண்ணாமல் பேசுகிறாய்
உன்னைநான் நம்பி விட்டால் — பின்னே இவ்
வூரு சிரிக்கு மடா!