RSS

Category Archives: வாழ்க்கைக் குறிப்பு

“தமிழ் முழக்கம்” கவி.கா.மு.ஷெரீப்

(கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி “தினமணி” தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது)

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

“தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். “எனக்கென எஞ்சி நின்றவை — புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று” என்றும், “புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது” என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைதவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

“சீறாப்புராணம்” சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்” என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

“தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக” என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் “சந்திரோதயம்” என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். ‘அன்னையா? கன்னியா?’ என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் ‘சாட்டை’ இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் ‘தமிழ் முரசு’ என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் “தமிழகக் களக்கவினர்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில் ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

“மாயாவதி” என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். ‘பெண் தெய்வம்’, ‘புது யுகம்’ ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை ‘மச்சகந்தி’ என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.
நன்றி : தஞ்சாவூரான் (பாரதி பயிலகம் வலைப்பூ)

 

Tags: , , ,

தாய்நாடு

தாய்நாடு – 1947 டிசம்பரில் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இது ஏழாவது ஆண்டின் இறுதி இதழ். ஆசிரியர். க.நாராயணன். புதுக்கோட்டையிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. அட்டையிலுள்ளவர் விஜயலட்சுமி பண்டிட்.

தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை கா.மு.ஷெரீப் இந்த இதழில் எழுதியுள்ளார்.

 

“தமிழ் முழக்கம்” (மாதமிருமுறை)

 1.10.55 -ஆம் ஆண்டு கவி.கா.மு.ஷெரீப் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “தமிழ் முழக்கம்” (மாதமிருமுறை) பத்திரிக்கையின் அரிய பிரதியை இங்கே வாசித்து மகிழலாம்.

இங்கே :

 

புரிந்த தொழில்கள்

  • சிறுகடை
    கடை குமாஸ்தா
    விவசாயம்
    பத்திரிக்கை துணை ஆசிரியர்
    நூலாசிரியர்
    நாடக ஆசிரியர்
    நாடக-சினிமா பாடலாசிரியர்
    கதாசிரியர்
    வசனகர்த்தா
 

எழுதிய நூல்கள்

books

கவி கா.மு.ஷெரீப் அவர்கள் சீறாப் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களுக்கு முழு உரைகளும் எழுதியுள்ளார். இவையல்லாது அவர் எழுதிய பிற நூல்கள் :

  • புலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)
  • கண்ணகியின் கனவு (இலக்கியக் கட்டுரைகள்)
  • தமிழரின் சமயநெறி
  • மச்ச கந்தி (ஆங்கிலம் & தமிழ்)
  • விபீஷணன் வெளியேற்றம்
  • மச்ச கந்தி (பீஷ்ம சபதம்) குறுங்காவியம்
  • வீரன் செண்பகராமன் வரலாறு
  • களப்பாட்டு
  • கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்
  • கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள் (1948 முதல் 1956 வரை)
  • இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?
  • பொது சிவில் சட்டம் பொருந்துமா?
  • வீரன் செண்பகராமன் வரலாறு

இஸ்லாமிய நூல்கள் :

  • ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ் ஓர் ஆய்வு
  • பல்கீஸ் நாச்சியார் காவியம்
  • நபி தம் பேரர்
  • ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்
  • ஆன்ம கீதம் (அந்தாதி)
  • வள்ளல் சீதக்காதி வரலாறு
  • இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
  • கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடு
  • இறைவனுக்காக வாழ்வது எப்படி?
  • இறையருள் வேட்டல்
  • பத்ர் போரின் பின் விளைவுகள்
  • சீறாப்புராணம் சொற்பொழிவு
 

விருதுகள்

பெற்றுள்ள பட்டங்கள்:
இருபதுக்கு மேல்

பொற்கிழி :
தமிழின மக்கள் சார்பாக 1964 -ல் மேயர் திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ரூ. 10,000/=

தாயுமானவர் நாடகப் பரிசு
தமிழக இயல் இசை நாடக மன்றம் வழங்கியது 1500/-
தமிழக அரசு : திரு.வி.க. விருது 10,000/=
தேசிய எழுத்தாளர் பாராட்டு வி.ஜி. பன்னீர்தாஸ் சகோதரர் வழங்கல் 1000/-

பொற்பதக்கம் :
தமிழக இயல் இசை நாடக மன்றம் சார்பிலும்
ஈப்போ (மலேயா) தமிழர்கள் சார்பிலும்
பினாங்கு (மலேயா) தமிழர்கள் சார்பிலும்
சென்னை முத்தமிழ் மன்றம் சார்பிலும் பொற்பதக்கங்கள்

பொற்கணையாழி : துபாய் – சார்ஜா தமிழ் பண்பாட்டுக் கழகம்

 

வாழ்க்கைக் குறிப்பு

kmsheriff

பெயர் : கவி கா.மு.ஷெரீப்
பூர்வீக ஊர் : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தை விநாயகர் கோட்டை
பிறப்பு : 1914 செப்டம்பர் – 11,
தந்தை பெயர் : காதர்ஷா ராவுத்தர்
தாயார்: முகம்மது இபுறாஹீப்பாத்தம்மாள்
உடன் பிறப்புக்கள் : கிடையாது
தாய்மொழி : தமிழ்
மக்கள் : ஆண் 8, பெண் 1, வளர்புப் பெண் 2, ஆண் 1, ஆகப் பன்னிரண்டு
நடத்திய ஏடுகள் : ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, திங்கள், திங்களிருமுறை, கிழமை ஏடுகள்
எழுதிய நூல்கள் : சிறுகதை நூல்கள் 3, நவீனம் 3, நாடக நூல்கள் 4, இலக்கியக் கட்டுரை நூல் 1, அறிவுரைக் கடித நூல் 1, பயண நூல் 1, கவிதை நூற்கள் 7, குறுங் காவியம் 1, அரசியல் நூல் 3, உரை நூல் சீறாப்புராணம் – 8 பாகங்கள்
இறப்பு : 80 வயதில் (1994 ஜூலை 7-ஆம் தேதி)

(மேற்கண்ட வாழ்க்கைக் குறிப்பினை வழங்கிய கவி கா.மு. ஷெரீப் அவர்களுடைய புதல்வர் ஜனாப் K.M. சீதக்காதி ஷெரீப் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – அப்துல் கையூம் – நாகூரி)